வெள்ளி, 4 மார்ச், 2016

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க சிறந்த பரிகாரம்.

பித்ரு தோஷம் என்றால் என்ன?
பித்ரு தோஷத்தை போக்க சிறந்த பரிகாரம்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். இவர்களை வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்கள் அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையும் ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர்.
இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.
தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்-தந்தையர் காலமாகிவிட்டால் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை இறுதிச்சடங்கு பிள்ளைகள் செய்தால் மட்டும் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்
ஈமக்கிரியைகளைச் செய்ய தவறியவர்கள் என்று இறைவன் கணக்கில் எல்லாரும் வரமாட்டார்கள் கீழ்கண்ட வகையில் தவறுபவர்களை மட்டுமே இறைவன் இந்த கணக்கில் கொண்டு வருகிறார்
கூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் ஆண் பெண் இருவரும் வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்தும் சொத்து சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமக்கிரியைகளை செய்யாமல் உதாசீனப்படுத்துவது போன்ற செயல்களால் வரும்.
பித்ருதோஷம் என்பது ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 இடங்களில் இராகு / கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம், மற்றும் ஜாதகத்தில் சூரியன் / சந்திரன் ராகுவுடனோ / கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு, மற்றும் 9ம் அதிபதியும் 5ம் அதிபதியும் சோர்ந்து 1/5/9 ம் வீட்டில் இருந்தாலும் தோஷத்தை தரும்.
அதுமட்டுமல்ல தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண் பெண் இருபாலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாத்தால் பித்ருதோஷம் பெற்றவர்கள், கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாத்தால் பித்ருதோஷம் பெற்றவர்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது நடைமுறையில் ஒத்துபோகவில்லை.
இந்த பித்ருதோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகள் இந்த பிறவியின் ஜாதகத்தில் குறிப்பிட்ட இடங்களில் (ராகு, கேது) நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.
இந்த பித்ருதோஷம், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வேலை, சொந்த தொழில், அரசாங்க வேலையை மற்றும் திருமணத்தை மிகத் தாமதமாக கிடைக்கச் செய்யும்.
பித்ரு தோஷம் உடையவர்கள் எப்பொழுதும் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் இடையே தீராத பிரச்சனைகளை விளைவிக்கும். இந்தப்பிறவியில் கடவுளை கேலி செய்பவர்கள், பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பித்ருதோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள். பித்ரு தோஷம் நீங்கியப்பிறகுதான் நமக்கும் ஜாதகரீதியாக எல்லா பலன்களும் கிடைக்கும்.
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
பித்ரு தோஷம் நீங்க உரிய பரிகாரம்.
பரிகாரம் செய்ய சிறந்த இடம் இராமேஸ்வரம். அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்ய வேண்டும். காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது. சிரத்தையுடனும், முழு மனதுடனும் ஹோமம் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் ( இக்காலத்தில் கழுகு) அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும். அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். இதனை முறைப்படி செய்வதற்க்கு நபர்கள் குறைவு, பணம் மட்டுமே நோக்கமாக செய்யப்படும் ஹோமம் மற்றும் யாகம் சிறந்த பலன்களை தராது.
வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்யலாம். கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம்.
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.
இதை செய்ய முடியாதவர்கள்.
பரிகாரம்-1
நூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு ஏதேனும் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும் உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும் இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும் அந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ருதோஷம் விலகும்.
பரிகாரம்-2
நூறுகிராம் பச்சரிசி, ஒரு கட்டு அகத்திகீரை, 10கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், 5 வாழைக்காய் ஆகியவற்றை ஒரு பெரிய தலை வாழ இலையில் வைத்து அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும், ( இதை வசிக்கும் வீட்டில் செய்தால் உத்தமம்) வசதியில்லாத வீட்டில் இருப்பவர்கள் பசு இருக்கும் இடத்தில் கொடுக்க வேண்டும். பித்ருதோஷம் நீங்கும் தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு தொடர்ந்து பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்
கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டையில் பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர். (நாமும் இப்படிச் செய்யலாம்)
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான (யோகம்) கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை ( கவனம்) குறைவுடன் செய்தல் காரணமாகும்.
பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக